»
S
I
D
E
B
A
R
«
கருவுறுதலில் பெண்களின் முடிவெடுக்கும் உரிமை
March 8th, 2006 by பத்மா அர்விந்த்

விவாகரத்து வழக்கொன்றில் நான் மொழிபெயர்ப்பாளராக ஒரு பெண்ணுடன் போய் இருந்தேன். அந்த பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள். கணவனுடன் நல்ல உறவு இல்லை, கொடுமைக்காரனாக அடக்குமுறை கொண்டவனாக இருந்தவன் என்று தெரிந்தும் ஏன் இரண்டு பிள்ளை பெற்றுக்கொண்டாய் என்று கேட்கும் உறவினர், அன்னை, சகோதரி கூட்டம். இந்த நாளில் எத்தனை கர்ப்பத்தடை வழிகள் உண்டு ஆனாலும் இத்தனை முட்டாளாக ஒரு பெண்ணா என்று பேசும் நண்பர் கூட்டம் என்று அத்தனையும் உண்டு.

13 குழந்தைகள் கொண்ட பென்ணை கேலி பேசுவதும், அதேபோல குழந்தை இல்லாத பெண்ணை குறை கூறுவதும், மங்களகரமான நிகழ்வுகளில் இருந்து விலக்கி வைப்பதும் எத்தனை குரூர செயல். இன்னமும் கருவைத்தாங்கும் பெண்களுக்கு நம் நாட்டில் முழு உரிமை இல்லை என்பதை யாரேனும் உணர்வார்களா?

திருமணம் ஆனபின், கணாவனுடன் உறவு கொள்வதற்கு திருமணத்தில் பேசிய தொகை முழுதும் வராதவரை இல்லை என்று சொல்லி தடை சொல்பவரிலிருந்து, இன்று விசேஷ நாள் (விரத நாள்) என்று சொல்லி தடை விதித்து, மனைவி கண வனுடன் கூட செல்லும் நாளில் அவரின் மாத சுழற்சியில் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம் இல்லாமல் போவதால் குழந்தை பிறக்கவில்லை என்று மருத்துவர்கள் சொன்ன போதும், பிடிவாதமாக இருந்து கடைசியில் மலடி என்ற பெயரோடு வாழ்ந்தவர்கள் உண்டு. என் சகோதரியின் உறவினர் ஒருவர் கணவனின் அன்னையின் காவலில் இருந்தே 35 வயதாகிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக அன்னையும், கணவனும் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட, இப்போது தனியாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

இன்னொருபக்கம் கவனக்குறைவால் கருத்தரித்து, குடும்ப நிதி நிலைமை அதற்கு இடம் தராததால் ஊசி கொண்டும், செயற்கையாக தகுந்த திறமை இல்லாதவரிடம் சென்று கருக்கலைப்பு செய்து கொள்ள வற்பூறுத்தி, மாட்டேன் என்று மனைவி அழுது கெஞ்சினால் நான் வேண்டுமா இந்த பிள்ளை வேண்டுமா என்று முடிவு செய்து கொள் என்று பயமுறுத்தி பணியவைப்பது இன்னொரு ரகம்.

இன்னும் சில குடும்பங்களில் கணவன் நிறைய முடிக்க வேண்டிய கடமை இருந்தால், அக்கா தங்கை திருமணம், வீட்டு கடன் என்று முடியும் வரை பிள்ளை பெற்று கொள்ள பெண்னுக்கு உரிமை இல்லை. தவ றி கருத்தரித்துவிட்டால், நமக்கென்ன வயசா ஆயிடுத்து, இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் என்று முடிவெடுப்பதும் கணவனே. இதே மனைவியின் உடல் நலம் கருக்கலைப்புகளால் அல்லது தடை மாத்திரைகளால் கெட்டுவிடும் என்ற அக்கறை கூட இல்லாமல் சுயநலத்துடன் நடந்து கொள்பவர்களை என்ன சொல்ல?

கருத்தரித்தபின் முதல் குழந்தை ஆணாக வேண்டும். பெண்ணாக பிறந்துவிட்டால், அந்த பெண் அடையும் துன்பங்கள் இன்னமும் நிறைய இடங்களில் மாறவில்லை. ஆண் குழந்தை பிறக்கும் வரை அடுத்தடுத்து உருவாகும் கருக்கள் அவள் உடல் நலனை அடியோடு கெடுத்துவிடும். இந்த பழக்கம் இங்கே யூதர்களிடமும் இருக்கிறது.

சில பெண்கள் விரும்பாமலே கணவன் உறவு கொள்வது சாதாரணம். அதிலும் வாய்வழி உறவு கொள்வதை அருவெறுப்பாக நினைக்கும் பெண்களுக்கு, அதனால் நோய்வாய்ப்பட நேருமோ என்ற அச்சம் உள்ளவர்களிடம் அதுபற்றிய கல்வி தராமல் கட்டாயப்படுத்தும் போது மன உளைச்சலுக்கு ஆளாவதும் அதிகம்.

நிறைய பெண்களிடம் தங்கள் உரிமைகளை பற்றிய குறைந்த பட்ச அறிவு கூட இல்லை. பெண் கணவனின் உடைமை என்றே பலரும் நினைக்கிறார்கள். உடல் வலி, மன உளைச்சல் இதை பொருட்படுத்தாமல் கடமை போல பயத்தினால் உடன் படுகிற பெண்கள் அதிகம். நாம் வேண்டாம் என்று சொன்னால் வேறெங்காவது கவனம் போய் கணவனை இழந்துவிடுமோ என்ற பயம் பெண்களை உடன் பட வைக்கிறது.
கட்டாயப்படுத்தி உறவு கொண்டு, தற்காப்பும் இல்லாமல் கடைசியில் அந்த பெண் கர்ப்பமானால் எள்ளி நகையாடுவது எப்போது மாறும்? இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் தற்போது ஒரு குழந்தை, இந்த நிலை மாறிவிட்டது என்று சொல்பவர்கள் தமிழக, மெட்ரோபாலிட்டன் நகரங்களை தாண்டி வெளியே வாருங்கள். கிராமப்புறங்கள், குறிப்பாக மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பஞ்சாப், மற்றும் பீஹார் போன்ற இடங்களுக்கு , கிராமங்களுக்கு சென்று பார்த்தால் இதன் கொடுமை தெரியும். இங்கே நியுஜெர்ஸியிலேயே அப்படி வரிசையாக குழந்தை பெற்று கொண்டு திண்டாடும் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

தயங்கி தயங்கி அவமானமும் வெட்கமும் மேலிட, அவர் ரொம்ப கட்டாயப்படுத்திதான் நடந்தது. எல்லாரும் என்ன தப்பு சொல்றாங்க: என்று கண்ணீருடன் சொல்லும் பெண்ணிடம் பேசினால் தெரியும் நாம் மனைவியின் உணர்வுகளுக்கு எத்தனை உரிமை தருகிறோம் என்று. ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே என்று பாடிவிட்டு பாவிமகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா என்றும் கேலிபேசுவதும் அதே இனம்தானே.

கருக்கலைப்பை பற்றியும் அதில் இருக்கிற உரிமைகளையும் அதில் மதங்கள் தலையிடுவதையும் பற்றி பேசவில்லை. அதற்கெல்லாமல் ஆதார உறவினிலேயே இருக்கும் அடக்குமுறை பற்றி மட்டுமே இங்கே கூறி இருக்கிறேன்.

இந்த நிலையில் இந்தியாவில் பல இடங்களில் பெண்கள் தினம் கொண்டாடப்படலாம். அவர்கள் விழாக்கொண்டாட்டம் இடையே விழிப்புணர்வு சற்றேனும் ஏற்படுத்துவார்களானால் அதுவே பெண்களுக்கு உதவியாக இருக்கும்.

தொடர்புடைய சுட்டி: பெண்களின் நெருக்கமான பகைவன்


16 Responses  
  • வெளிகண்ட நாதர் writes:
    March 8th, 2006 at 8:32 pm

    //ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே // இந்த பாலசந்த்ர், மன்மதலீலையும் அப்படி தான் எடுத்துருந்தார், விவாக்கரத்து நேரத்தில, அவன் வீட்டுக்கு போய் புள்ளயோட வாந்த்டிருக்கியேன்னு ஒய் ஜி மகேந்திரன் கத்துவாரு!

    நல்ல கருத்து, கருவுற்றல் பெண்ணின் உரிமையாக இருக்க வேண்டும்!

  • செல்வராஜ் writes:
    March 8th, 2006 at 9:51 pm

    கருக்கலைப்பில் பெண்ணுரிமை என்பதே பெரிதும் விவாதிக்கப்படும் நிலையில் கருவுறுதலில் பெண்ணுரிமை பற்றிய பார்வை நன்று. நீங்கள் சொல்லியிருப்பது உண்மையே. குறிப்பாகப் பெருநகரங்களை விட்டு வெளியே வந்தால் இதை அதிகம் பார்க்கலாம் என்றாலும், அமெரிக்கா, நியுஜெர்சி நகரிலேயே இதைப் பார்க்கலாம் என்று நீங்கள் எழுதியிருப்பது யோசிக்க வைக்கிறது. வெறும் கிராமப்புற நோயாக மட்டும் இதனைப் பார்க்க முடியாது என்று சொல்லுகிறது.

  • தாணு writes:
    March 9th, 2006 at 5:04 am

    //ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே//
    இந்தப் பாடல் அரங்கேறி 25 வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும் ஆண்-பெண் உறவின் அடிப்படை இந்த தத்துவத்திலேயேதான் இன்றுவரையும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆதிக்கம் செலுத்தும்போதே அவன் சர்வாதிகாரி ஆகிவிடும்போது, நாயகனாகக் கொண்டாடுவது எப்படி? கருத்தரிக்கும் வாய்ப்பு என்பதாவது ,சமுதாயத்தில் சில தரக்குறைவான விமர்சனங்களை எதிர் கொள்ளும்பொருட்டு குடும்பத்துக்கு குடும்பம் மாறும். ஆனால் பாலியல் சார்ந்த அராஜகங்கள் வெளியில் தெரியாமலே புரையோடிப் போயுள்ளது. சமுதாயத்தின் உயர்ந்த மதிக்கத் தகுந்த நிலையில் இருப்பவர்கள் கூட செக்ஸ் காரணமாக தம் மனைவியரைக் கீழ்த்தரமாக பாவிக்கும் கொடுமைகள் அநேகம். மருத்துவ ரீதியாக உடல்நிலை சார்ந்த வக்கிரங்களை தினசரி பார்க்க முடிகிறது. SEXUAL VIOLATIONS between couples க்கு ஏதாவது வரையறையும் சட்டங்களும் இருக்கிறதா பத்மா?

  • பத்மா அர்விந்த் writes:
    March 9th, 2006 at 6:38 am

    வெளிகண்ட நாதர்: உரிமை என்பதைவிட கருத்தரித்தல் ஒருவரின் ஒருமித்த முடிவாக இருக்க வேண்டும் என்பதும், பெண்ணின் உடல் சார்ந்த விஷயங்களில் அவளின் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதும் நடைமுறைக்கு வந்தாலே நன்றாக இருக்கும்.
    செல்வராஜ்: கருக்கலைப்பு அடுத்தபடி. நாம் இன்னும் அச்திவாரத்திலேயே ஆரம்பிக்க வேண்டியதிருக்கிறது, திருமணம் முதல்.
    தாணு: நிறைய சட்டங்கள், வரைமுறைகள் இங்கே உண்டு. இந்தியாவிலும் இருக்க கூடும். இதில் கொடுமை என்ன வென்றால் பிறப்பு உறுப்பை கடித்து குதறி புண்ணான நிலையிலும் யாரிடம் சொல்ல முடியாமல் புரையோடி போயும் வலியை மறைத்து தினசரி கடமைகளை செய்யும் பெண்களை பார்ப்பதுதான்.

  • யாத்திரீகன் writes:
    March 9th, 2006 at 9:06 am

    கேட்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது… நீங்கள் சொன்னதுபோல் கிராமப்புறங்களில் இத்தகைய தர்மசங்கடமான நிலையில் பெண்கள் பலர் உள்ளனர்…

  • தங்கமணி writes:
    March 9th, 2006 at 2:20 pm

    பத்மா. உங்களை இங்கு மீளக்காண்பதில் மகிழ்ச்சி.

    நன்றாக இருக்கிறது வலைப்பதிவு.

    ***
    கருத்தரித்தல் பற்றிய உரிமை இருபாலினரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியதுதான் என்றாலும், பெண்ணை எந்தக் காரணத்துக்காகவும் வற்புறுத்த அதில் இடமிருக்கக்கூடாது. பெண்ணை சொத்தாகவும், அதிலும் குழந்தைப்பேற்றை பெறுவதற்கான சொத்தாகவும் கற்பிக்கிற சமூகத்தில் இந்த உரிமையை எதிர்ப்பார்க்கமுடியாது. பாலுறவுகள் பற்றிய மதம் சார்ந்த குற்ற உணர்வுகள் அடிமனதில் இருந்து ஒழிக்கப்படாதவரை ஆண்கள் தங்கள் துணையை சமமாகவும், தன்னை சுயமரியாதை கொண்டவனாகவும் பார்ப்பது இயலாது. பல ஆண்கள் இயலாமையினாலும், பரிதாபத்தினாலும் பெண்களிடம் கொடுமை செய்யாமல் நடக்கின்றனர். ஆனால் பெண்கள் தமது உரிமைகளைக் கேட்கும்போது இந்த ஆண்களிடம் இருந்து கிடைக்கும் பரிதாபத்தை இழக்கநேர்கிறது. இது பெண்களின் மேல் நடக்கும் குற்றச்செயல்கள் அதிகரிக்க முக்கியமான ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

    தன் தாய்க்காக அழுதுகொண்டு மனைவியை மாயப்பிசாசாய் பார்க்கும் பட்டினத்தாரின் துளி ஒவ்வொரு ஆணிடமும் இருக்கிறது. அதுவே பெண்களின் மேலான வன்முறையின் விதையும் ஆகும்.

  • Nithya writes:
    March 9th, 2006 at 3:16 pm

    One (like me) would think that educated people would think on their own and hence make their own decisions, at least when it comes to the really big things in life. But unfortunately, society and tradition and peer pressure seem to cloud that. And hence, women keep on depending on somebody else or something else to make the decisions for them. If it hasn’t changed for this long, I am not sure when and how it would change anymore.

  • பத்மா அர்விந்த் writes:
    March 9th, 2006 at 7:35 pm

    Rathi
    It is depressing to read, imagine those suffer!! I have written on positive things in my own way. If you read, Thanu’s comment as a doctor, you will understand the seriousness.
    Nithya,
    Thanks. we need to learn to make decision. women hesitate to make decision fo rthe fear of failure. if it fails, the blames are unberable. You said it right, we have to learn to make decisions.

  • -/பெயரிலி. writes:
    March 9th, 2006 at 7:36 pm

    இதைப் பார்த்தீர்களா?
    http://news.bbc.co.uk/2/hi/americas/4789090.stm

  • பத்மா அர்விந்த் writes:
    March 9th, 2006 at 7:37 pm

    நன்றி யாத்திரீகன்.
    தங்கமணி: வலைப்பதிவின் நேர்த்திக்கான பாராட்டு உருவாக்கிய தோழிக்கே.
    நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். எப்போதாவது ஒருசமயம் ஆதிக்கம் வெளிப்படுகிறது

  • பத்மா writes:
    March 9th, 2006 at 7:49 pm

    பெயரிலி: சுட்டிக்கு நன்றி. சட்டம் இல்லாமலே வேறு மநிலங்களுக்கு போய், அல்லது பணி செய்யும் இடத்தில் காசோலையாக இல்லாமல் பணமாக ஊதியம் பெற்று குழந்தைகளுக்கான உதவித்தொகை வழங்காமல் இருக்க இப்போதே பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் சரியாக உதவித்தொகை வழங்கப்படாவிட்டால் கைது செய்யப்படலாம் என்ற போதும். பெண்கள் நீதிமன்றத்தில் போராட வேண்டி இருக்கிறது. தினக்கூலி வேலையில் இருப்பவர்கள் விடுமுறையும் எடுக்க முடியாமல் படும் துன்பங்கள் அனேகம்.

  • கார்த்திக் writes:
    March 9th, 2006 at 7:58 pm

    //நிறைய பெண்களிடம் தங்கள் உரிமைகளை பற்றிய குறைந்த பட்ச அறிவு கூட இல்லை//

    நிதர்சனமான உண்மை. சட்டங்களை/உரிமைகளை விட விழிப்புணர்வே நல்ல தீர்வு. மேலும் மேலும் சட்டங்கள் என்பது நகரவாசிகளுக்கு வேண்டுமானால் உதவுமே தவிர கிராமங்களை அடைய விழிப்புணர்வே தேவை

  • டிசே writes:
    March 9th, 2006 at 9:30 pm

    அவசியமான பதிவு பத்மா. நன்றி.
    ….
    //தன் தாய்க்காக அழுதுகொண்டு மனைவியை மாயப்பிசாசாய் பார்க்கும் பட்டினத்தாரின் துளி ஒவ்வொரு ஆணிடமும் இருக்கிறது. அதுவே பெண்களின் மேலான வன்முறையின் விதையும் ஆகும். //
    தங்கமணி, சரி போலத்தான் எனக்குந் தோன்றுகின்றது.
    ….
    இந்தப் பதிவுக்கு தொடர்பில்லாத ஒருவிடயம், எது எதுக்கோ எல்லாம் புத்தகம் அது இது என்று அடித்து வெளியிடுகின்றார்கள். இப்படி பத்மா போன்றவர்கள் எழுதும் கட்டுரைகளைத் தொகுத்தும் வெளியிடவேண்டும் என்று யாருக்காவது யோசனை வந்தால் நன்றாக இருக்கும்.

  • வேலாம்பிகை writes:
    April 18th, 2006 at 1:34 am

    நல்ல பதிவு – வாழ்த்துக்கள்

  • நாகு writes:
    May 4th, 2006 at 6:10 am

    பெண்களுக்கு தங்களுக்குரிய அடிப்படையுரிமை குறி த்த தெளிவின்மை அதிகம் என்பது உங்கள் கருத்து, அதை ஆமோதிக்கின்றேன்.

    ஆனால் கடந்த பத்தாண்டுகால சமூகச்சூழலைக் காணும் பொழுது, இது சற்று மேம்பாடு அடைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

    இது பெண்களுக்கு வெறும் பட்டறிவினால் மட்டும் வந்துவிடாது. பெண்கள் எவ்வளவுதான் படித்திருந்தா லும், ஒவ்வொரு குடும்பத்தின் தனி ப்பட்ட ஆளுமை, அவளை தட்டி, ‘நீ இப்படித்தான் இருக்கவேண்டும். இப்படி நடந்துக்கொ ள்ளவேண்டும்…’ என்பன போன்ற ஒரு உணர்வை அவர்களது வளரிளம்பருவம் தொட்டே ஏற்படுத்திவி டுகின்றது.

    இந்த விசயத்தில் ஆண்கள்தான் புரிந்து ந டந்துகொள்ள வேண்டும், ஏனெனில் விட்டுக்கொடுத்தல் தா னே வாழ்க்கை!

  • பத்மா அர்விந்த் writes:
    May 15th, 2006 at 7:16 am

    கார்த்திக், வேலம்பிகை, நாகு, டீசே: நன்றிகள் பல. சட்டங்கள் வந்தாலும் அதை பற்ரிய விழிப்புணர்வு அவசியம். மேலும் விலியவர்க்கு உதவும் சட்டங்கள் எளியோருக்கு ஆதரவாக இருப்பது நடைமுறையில் எந்த நாட்டிலும் இல்லை. நீதியும் சில சமயம் பணத்திற்கு விலை போவது கண்கூடு.
    நாகு: நீங்கள் சொன்னதுபோல ஆண்களின் ஆதரவு இருப்பது மிக முக்கியம்.


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions