நீங்கள் எப்போதாவது குணசீலம் போய் இருக்கிறீர்களா? அங்கே மன நிலை பிறழ்ந்தவர்களை சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். அனுதினமும் காலை கோவில் குளத்தில் குளிக்க வைத்து சன்னிதிக்கு அழைத்து வந்து அங்கே தரும் பிரசாதத்தை உண்டால் குணமாகி விடும் என்ற ஒரு நம்பிக்கை. காலில் சங்கிலியுடன், பரிதாபமாக இருக்கும்அந்த மனிதர்களை பார்க்கையில் மனம் வருத்தமாக இருக்கும். அவ்வப்போது பூசாரி வைத்து மந்திரிப்பது, துடைப்பத்தால் அடித்து பெண்களுக்கு பேயோட்டுவது, தலமுடியை கொத்தாக பிடித்து இழுத்து அடிப்பது, பணிந்து வரவேண்டும் என்று வன்முறை செய்வது, அறியாமையால், ஏதோ ஒரு நம்பிக்கையால் அந்த பூசாரிகளிடமே தம் பெண்களை குணமாகும் வரை விட்டு வருவது என்று நிறைய நிகழ்ச்சிகளை படித்திருக்கிறேன். இதில் பல பெண்கள் பூசாரிகளால் பாலியல் துன்பத்திற்கு ஆளான கதையையும் கேட்டிருக்கிறேன். ஆனாலும் கணவனை பற்றிய மனக்கவலைகளைச் சொன்னால், மதிப்பு போய்விடுமோ என்ற பயம் அல்லது இதென்ன பெரிய விஷயம் நான் பார்க்காததா, இவனுடைய அப்பாவை விட இவன் எவ்வளவோ பரவாயில்லை என்ற சமாதனமோ கிடைக்குமே தவிர தீர்ப்பு கிடைப்பதில்லை. மன அழுத்தம் அதிகமாக இருக்கும் ஒருவித vulnerable நிலையில் உள்ள பெண்கள் அதிகம் இதுபோல நம்பிக்கையில் விழுகிறார்கள். நம் சமூகத்தில் மனநோய்க்கு அதிக ஆதரவோ புரிந்துணர்வோ இல்லை. உண்மையில் சொல்ல போனால் நாம் அனைவருமே எப்பொழுதாவது ஒருமுறை மனச்சோர்வுக்கு ஆளாகிறோம், ஆனால் அது நம்மை அல்லது சில சமயம் நம் குடும்பத்தை தவிர மற்றவரை பாதிக்காமல் இருப்பதில் கவனம் செலுத்துகிறோம். அது வரம்பு மீறி, தன் கட்டுப்பாட்டை இழக்கும் போது இது போல பரிகாரங்களையும், தெய்வ குற்றமாக கோவில் கோவிலாக செல்லவும் ஜாதக ஆலோசனை, தோஷம் போக்க சில கட்டுப்பாடுகள், விரதங்கள் என முடிந்து போகிறது.
பெண்களைப்போலவே ஆண்களும் மன அழுத்தம், மன சோர்வுக்கு ஆளாவது உண்டு. ஒவ்வொருவர் ஒவ்வொருவகையில் வடிகால்கள் தேடிக்கொள்கிரார்கள். இதில் ஆண்மை என்பது உணர்ச்சிகளுக்கு அதிகம் ஆட்படுவதில்லை, அழுவதோ பாராட்டிக்கொள்வதோ இல்லை என்ற ஒரு பிம்பம் இருப்பதால், இவர்கள் பாடு இன்னும் மோசம். இப்படி பட்ட சூழலில் மேலை நாடுகளில் திருமண பிரச்சினையானாலும் போதைப் பழகத்தில் இருந்து விடுபவேண்டுமானாலும் இல்லை அலுவலக பணி அழுத்தம், சக பணியாளரிடையே பிரச்சினை எல்லாவற்றிற்கும் அலுவகத்திலேயே, இல்லை வெளியே ஆலோசனை சொல்ல மனநலத்தில் தேர்ச்சியும் இந்த பிரச்சினையில் தனிப்பட்ட ஆதாயம் இல்லாமல் நடுநிலையோடு அதை அலசி வழிநடத்தவும் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். அதனை போலவே நம் ஊரிலும் இப்போது நிறைய முறையான பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பரவலாக பத்திரிக்கைகளில் கொஞ்சம் புகழோடு கூடிய நடிகைகளை ஆலோசனை கூற அழைக்கிறார்கள். இதில் பெரும்பாலும் பெண்களுக்கு பொறுமையோடு இருங்கள், அடிக்கிற கைதானே அணைக்கும் என்றெல்லாம் ஆலோசனை சொல்லப்படுவதை கண்டு சலித்திருக்கிறேன். இதற்கும் மேலாக சில வார இதழ்களில் தற்கொலை செய்து கொள்ள இருக்கிறேன், என் பிரச்சினைகளுக்கு உடனே ஒரு தீர்வை சொல்லுங்கள் என்ற வுடன், பூவரசன்குப்பம் நரசிம்மன சன்னிதியில் விளக்கேற்றுங்கள் என்றோ, ஜாதகப்படி உங்கள் மனைவி சபல புத்தியுடையவர் என்ரு தெரிகிறது, விவாகரத்து செய்துவிடுங்கள் என்றோ, உங்கள் பெண் மனம் அலை பாய்வது ஜாதகம் மூலம் தெரிவதால் படிப்பை நிறுத்தி உடனே திருமணம் செய்துவிடுங்கள் என்ரூ வரூகின்ற ஆலோசனைகள் கோபத்தை வரவழைக்கும். முன்பின் தெரியாதஒருவரின் வாழ்க்கை முடிவுகள் இன்னொருவரால், பெற்றோர்களுக்கு சொல்லப்பாடுவது எப்படி சரியாகும்?
இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் சுகி.சிவம் அவர்களிடம் ஒரு வாசகர் கேட்ட கேள்வியும் அதற்கான பதிலும் கீழே:
மேலைநாடுகளில் உளவியல் கல்வி கற்று, பட்டம் பெற்ற நிபுணர்களே மக்களின் பிரச்னைகளுக்கான ஆலோசகர்கள். ஆனால், இங்கோ உங்களைப் போன்ற சமயவாதிகள் அந்த வேலையைச் செய்கிறார்கள். இது சரிதானா
மேலைநாடுகளது சுயமுன்னேற்றச் சிந்தனைகளை மொழிபெயர்த்து உங்களை வளப்படுத்தும் பயிற்சியாளர்கள் இங்கும் நிறைய இருக்கிறார்கள்! ஆனால், அவர்களுக்கும் சமயவாதிகளான எங்களுக்கும் இடையில் நுட்பமான ஒரு வேறுபாடு இருக்கிறது. அவர்கள் பூமி; நாங்கள் ஆகாயம். பூமி அதிகம் பயன்படுவது போலத் தோன்றும். ஆனால், ஆகாயம் என்ற இடைவெளி இருப்பதால்தான் பூமி இயங்க முடிகிறது. ஆகாயம் என்பது இல்லாதது போல் தோன்றும் ஒன்று. ஆனால், அந்த இல்லாமையே பிறவற்றின் இருப்புக்கு ஆதாரம்.
சுலபமாக்குகிறேன். மனத்தை மையப்படுத்தியே மேற்கத்திய நிபுணர்கள் பேசுகிறார்கள். மனம்தான் நமது வெற்றி& தோல்விக்கான ஆதாரக் களம் என்கிறார்கள். மனதை உபயோகப்படுத்தி, வெற்றி பெறுங்கள் என்பது அவர்களது பாடத் திட்டம். சரியாக உபயோகப்படுத்துகிறவர்கள் வெற்றி பெறுகிறார்கள்; தவறாக உபயோகப்படுத்துகிறவர்கள் தோல்வி அடைகிறார்கள் என்று கற்றுத் தருவார்கள். ஆனால், இது சரியல்ல என்பதே என் போன்றவர்களது கருத்து. அவர்களது அஸ்திவாரமே ஆட்டம் காண் கிறது என்பதே ஆன்மிகவாதிகளின் அபிப்ராயம்.
காரணம் மனத்தை உபயோகப்படுத்தச் சொல்வதும், எழுதுவதும் சுலபம். ஆனால், வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் கூர்ந்து கவனித்தால், மனத்தை யாரும் உபயோகப்படுத்துவது இல்லை என்பது புலனாகும். உண்மையில், மனமே நம்மை உபயோகப்படுத்துகிறது. மனம் எஜமானனாகி, மனிதனை பயன்படுத்திக் கொள்கிறது. மனத்தைச் சரியாகப் பயன்படுத்துவது என்ற பேச்சு, குதிரைக் கொம்பு மாதிரி. மேலைநாட்டின் எல்லாச் சுய முன்னேற்ற நூல்களும் இந்தக் குதிரைக் கொம்பு வியாபாரத்தையே நடத்துகின்றன. உண்மையில் மனம் என்பது, பல ஆசைகள் சேர்ந்த ஒரு கூட்டம். அது ஒரே ஒரு ஆசையல்ல. உண்மையில் ஒரு மனம் என்பது, எண்ணற்ற முகங்கள் கொண்டது. எனவே, மனத்தைச் சரியாக உபயோகிப்பது… தவறாக உபயோகிப்பது… அல்லது உபயோகிக் காமல் இருப்பது என்கிற மேலைச் சிந்தனையாளர்கள் பலரது பயிற்சி முறைகள், வெறும் பசப்பு வார்த்தைகள், பாசாங்கு நாடகங்களே. உலக வரலாற்றை ஊன்றிப் பாருங்கள். மனம்தான் நம்மை உபயோகிக்கிறது; நம்மால் மனத்தை உபயோகிக்க முடியவில்லை என்பது விளங்கும்.
நமது கீழை நாட்டு ஆன்மிகம் வலிமையான அஸ்திவாரம் உடையது. ‘நான் மனம் அல்ல’ என்ற சிந்தனை, நெருப்பை விட& அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஓர் உண்மையை அது பயன்படுத்துகிறது. ‘நானே மனம்; மனமே நான்’ என்ற மேலை நாட்டுச் சிந்தனையைத் தகர்த்து எறிந்து, ‘நான் மனம் கடந்தவன்’, ‘மனமற்ற நிலையே மிக வலிய நிலை’, ‘மனத்துடன் இருத்தல் துன்பம் தரும்; மனமற்ற நிலையே ஆனந்தம்’ என்பதை நிரூபித்த பெருமை ஆன்மிகத்தை மட்டுமே சாரும். அதற்கு ‘ஆன்மா’வின் இருப்பை உணர வேண்டும்.
‘மனத்துக்கு நாம் எஜமானர்’ என்ற அசாதாரண உண்மையைப் புரிய வைக்கும் ஆன்மிகம், எனது உலகம். மனம் நமது எஜமானன் என்கிற சாதாரண உண்மையைப் புரிய வைத்துக் கொண்டிருப்பது மேலைநாட்டு உள நல நிபுணர்களது உலகம். நான் ஆகாயம்: அவர்கள் பூமி. நான் எப்படி அவர்களது வேலையைச் செய்ய முடியும்? எனது வேலையே வேறு… இப்போது சொல்லுங்கள். நான் செய்வது தவறா… சரியா
எனக்குப் புரியாதது ஒன்று, சில நியுரோ வேதிப்பொருட்கள் ஏற்றதாழ்வால் (inbalance)ஏற்படும் சில மன பிரச்சினைகளுக்கு இது எப்படி வடிகாலாகும்? அல்லது ஆன்மீகம் என்பது மூடநம்பிக்கைகள் அடக்கியதா இல்லை அப்பாற்பட்டதா? பிறந்த நேரம் துல்லியமாக தெரியாமல் கணித்த ஜாதகம் சொல்வதாக ஒரு பெண்ணை பாதியில் படிப்பை நிறுத்துவது, உங்கள் கணவரின் (அல்லது மனைவி) மீதுதான் பிழை, அசைவ உணவு உண்பதால்தான் இந்த பிரச்சினை என்று சொல்வது எதில் அடக்கம்?
இவை எல்லாம் கடந்த ஆன்மீகம் ஏன் பரபரப்பான ஊடகங்களில் தென்படுவதில்லை? மனத்தை கடந்து இருப்பவனுக்கு எப்படி வேறுபாடுகள் வரும்?